இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் பயிற்சி பெற்ற 50 பெண் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை திருநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,
ஆளுநர் மசோதா நிறைவேற்றாதது குறித்து கேள்விக்கு,
ஆளுநர்களை பொறுத்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் தலையிடுவதும், ஆளுநர் பணியை விடுத்து பாஜக மாநில கட்சி தலைவர் போல செயல்படுவது கண்டிக்கத்தக்கதாக உள்ளது. தமிழக ஆளுநர் அண்ணாமலைக்கு போட்டியாக பாஜக மாநில தலைவரை போல் செயல்படுகிறார் தவிர தமிழக ஆளுநருக்கான தகுதியை இழந்துவிட்டார். குடியரசுத் தலைவர் தலையிட்டு தமிழக ஆளுநரை அந்த பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
ஐந்து மாநில தேர்தல் குறித்த கேள்விக்கு,
மத்திய பிரதேசத்தில் 130 இடங்களையும், சட்டீஸ்கரில் 65 இடங்களையும் பெற்று வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்த கேள்விக்கு,
தவறானது, இப்படி நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது. இது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் வரை போவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களுடைய நிலத்திற்காக போராடுபவர்கள் மீது இவ்வளவு கடுமையான சட்டத்தை நிறைவேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
எய்ம்ஸ் டெண்டர் இழுபறி குறித்த கேள்விக்கு,
வாயில் வடை சுடும் கதையை பல காலமாக மோடி அரசு நடத்தி வருகிறது. அதற்கு முழு எடுத்துக்காட்டு மதுரையை எய்ம்ஸ். ராகுல் காந்தி பிரதமராகி அவரது கரங்களால் எய்ம்ஸ் திறக்கப்பட வேண்டும் என்று இருக்கிறது.
திருச்செந்தூரில் பக்தர்களிடம் அடாவடி வசூல் நடைபெற்றது குறித்த கேள்விக்கு:
என்ன நடைபெற்றாலும் சரியான ஆய்வு வேண்டும். பக்தர்களுக்கான கட்டண குறைப்பு குறித்த முடிவு எடுக்க வேண்டியது அறநிலையத்துறை. எனவே அவர்கள் நியாயமான முடிவு எடுக்க வேண்டும்.
உலக கோப்பை இறுதிப் போட்டி குறித்த கேள்விக்கு,
ஆஸ்திரேலியா அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்காத இந்திய அணியை சந்திக்கிறார்கள். இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இதற்கான ஆவலோடு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற இந்தியர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்தியர்கள் பாராட்டுவார்கள். இந்திய அணி மிக பலமான அணியாக உள்ளது. இந்த வெற்றி இந்தியாவின் வெற்றியாக இருக்கும். யார் வெற்றி பெற்றாலும் விளையாட்டு ரசிகர்களாக அதை நாம் பாராட்ட வேண்டும் என்றார்.