அமெரிக்க விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால கதவு வெடித்துப் பறந்ததால் அந்த விமானம் போர்ட்லேண்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாயினர்.
அமெரிக்காவில் ஓரேகான் பகுதியில் இருந்து கலிபோர்னியாவுக்கு புறப்பட்ட போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் அவசர கால கதவு வெடித்துப் பறந்ததால் அவ்விமானம் ஓரேகனின் போர்ட்லேண்டில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. போயிங் 737-9 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் அண்டாரியோவுக்கு செல்ல புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பித்தார்கள். எனினும் சில பயணிகள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
புறப்பட்ட ஆறு நிமிடங்களில் 16 ஆயிரம் அடி (4.8 கிலோமீட்டர்) உயரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் விமானத்துக்குள் வேகமாக காற்று வீசியதால் பயணிகள் சிலரின் அலைபேசி உள்ளிட்ட பொருள்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. ஜன்னலோரத்தில் பயணிகள் யாரும் அமர்ந்திருக்கவில்லை. இருக்கையில் அமர்ந்திருந்த ஒரே சிறுவனை காற்று இழுத்தபோதும் இருக்கையோடு சீட் பெல்ட்டால் பிணைக்கப்பட்டிருந்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
“ஒருவேளை ஜன்னல் அருகே உள்ள இருக்கைகளில் யாரேனும் இருந்திருந்தாலோ அல்லது அந்த இருக்கைக்கு அருகில் சீட் பெல்ட் அணிந்திருக்காவிட்டாலோ இந்தச் சம்பவம் வேறு மாதிரியானதாக முடிந்திருக்கும்”.