பெரம்பலூரில் உள்ள பிரபல சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நமிருணானிளி இன்று (05.02.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தனியார் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதில் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்தது. இதனையடுத்து, பெரம்பலூரில் இயங்கிவரும் பிரபல சைவ மற்றும் அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் உணவின் தரம், உணவுக்கூடம், சமையல் பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நமிருணாளினி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சமையலுக்கு தரமான எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றதா, பாத்திரங்கள் சுடுநீரில் முறையாக கழுவப்படுகின்றதா, சமையலறை மற்றும் உணவகம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
உணவகங்களை நம்பி வரும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உணவுப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், சமையலுக்கு தரமான எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்,
பாத்திரங்களை சுடுநீரில் கழுவ வேண்டும் என்றும், உணவகங்களை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், உணவக மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், உணவகம் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்த குறைபாடுகளை உணவுப்பாதுகாப்புத்துறைக்கு 94440 42322 எண்ணில் தெரிவிக்கலாம் என்ற தகவலை அனைத்து உணவகங்களிலும் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதுவரை இந்த எண்ணிற்கு எத்தனை புகார்கள் வந்துள்ளது என்றும், அந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது. மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் சக்திவேல், மாவட்ட உணவுப்பாதுகாப்புத் திட்ட நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.










