மிசோரத்தில் 40 சட்டமன்றத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் வாக்காளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள் காலை முதலே வாக்களித்து வருவது, மிசோரம் மாநில இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மாநில காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மிசோரம் மாநில முதலமைச்சர் சோரம் தங்கா, அய்ஸ்வால் வடக்கு- 2 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்ஸ்வால் வெங்கலை- 1 பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றுள்ளார். எனினும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மிசோரம் முதலமைச்சர் வாக்களிக்காமல் திரும்பினார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.