

கடல் பிரிக்கும் தமிழ் இணைக்கும் எனும் முழக்கத்துக்கேற்ப சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காகத் தயாராகும் வலைத்தொடர் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கே.எஸ்.ஐ.சுந்தர் இந்த வலைத்தொடரை இயக்குகிறார்
கப்பல் ஏறிய தமிழன் என பெயர் சூட்டப்பட்டுள்ளஇத்தொடரில் சிங்கப்பூரைச் சேர்ந்த விஜே ஜெய்ணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். பகாசுரன் படத்தில் செல்வராகவனின் மகளாக நடித்த தாராக்ஷி மற்றும் சிங்கப்பூரில் பிரபலமான திவ்யாரவீண் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு ராஜாராணி பாண்டியன், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் தற்போது சிங்கப்பூரில் பிரபலமாகவும் இருக்கும் நடிகை கோகிலா,பாண்டிரவி, வீரசமர், அஜயன்பாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.1940 களில் வெள்ளையர்களை எதிர்த்து நடந்த சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தமிழனின் வரலாற்றை
மையமாகக் கொண்டு இத்தொடருக்கான கதை எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கி சிங்கப்பூர் வரை கதை தொடர்கிறது. இதனால், காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
சேகர்வர்தன் ஒளிப்பதிவு செய்யும் இத்தொடருக்கு தேவா இசையமைக்கிறார். இதில் இடம்பெறும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். அண்மையில் இப்பாடல் பதிவு குறித்த காணொலியை வைரமுத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சேரனின் பொற்காலம் படத்தில், தேவா இசையில் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற பாடல் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல். இந்தப்பாடல் சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் இறுதி ஊர்வலத்தில் ஒலிபரப்பப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து கப்பல் ஏறிய தமிழனுக்காக உருவாக்கியிருக்கும் பாடலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்று உறுதி கூறுகிறார்கள்.
