கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 2 ம் தேதி தொடங்கியது.
மருதமலை, சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாள்தோறும் அதிகாலை 6:00 மணிக்கு கோ பூஜை, மாலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெற்றது. விழாவை ஒட்டி இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை உடன் நடை திறக்கப்படுகிறது. பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சத்ரு சம்கார வேள்வி நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு மூலவரிடம் இருந்து வேல் வாங்கி அன்னையிடம் வைத்து பூஜை செய்தனர். சுவாமி வேலை பெற்றுக் கொண்ட பின்னர் சூரசம்ஹாரதிற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் சுவாமி தாராக சூரனை வதம் செய்தார்.
2 – வது பானு கோபன் வதம் செய்தார், மூன்றாவதாக சிங்கமுகசூரன் வதம் செய்தார், நான்காவதாக சூரபத்மனை வதம் செய்தார்.
பின்னர் வதம் முடிந்து சுப்பிரமணியசாமிக்கு கோபத்தை தணிக்கும் வகையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி அளித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 10:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி – தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து சுப்பிரமணியசாமி – வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழு செய்து இருந்தனர்.





