• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jan 9, 2025

அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் பழனிச்சாமி கூறுகையில்..,

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி, கரும்பு விவசாயிகள் சங்கமும், ஆலைத் தொழிலாளர்களும் கடந்த நான்கு வருட காலமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டு கூட 46 நாள் ஆலை முன்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வேளாண்துறை அமைச்சரும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும், ஆலையை திறப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் என்று சொல்லி இங்கு வந்து கூட்டத்தை போட்டார்கள். கூட்டத்தை போட்டு ஆலைக்கு கமிட்டி ஒன்று அமைத்தார்கள். ஆலை திறப்பதற்கு 21 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினாங்க. ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வமும் அறிவிச்சாரு ஒன்னு நடக்கல.

எங்களுக்கு அதாவது திராவிட முன்னேற்ற கழக அரசு வந்து கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

இங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் வேறு ஆலைக்கு மாற்றி விட்டார்கள். இங்கு கரும்பை பதிவு செய்வதற்கு ஆட்கள் இல்லை. அதே நேரத்தில் இந்த வருஷம் இந்த பகுதியில 2 லட்சம் ஏக்கர் ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு போட்டு இருக்கிறார்கள். போட்டும் கூட அந்த அமைச்சர் சொல்றாரு கரும்பு இல்லை என்கிறார்.

மேலூர் தாலுகாவுக்கு செல்லலாம் அல்லது உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிக்கு செல்லலாம் அல்லது திருமங்கலத்திற்கு செல்லலாம் ஒவ்வொரு ஊருக்கும் போனால் இரண்டு, மூன்று லட்சம் கரும்பு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கரும்பு இல்லை என்று சொல்வது ஏமாற்று வேலை.

ஆலையை திறந்து கரும்பு பதிவதற்கு ஆள் இல்லை. நாங்கள் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக கமிஷன் இடம் போன் பண்ணி தகவல் கேட்டால், அவர்கள் நாங்கள் என்ன செய்வது மந்திரி பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அதனால் எங்களுக்கு என்ன சந்தேகம் என்றால் தனியார் சர்க்கரை ஆலையை வளர்ப்பதற்கு இதை மூடுகிறார்கள். இந்த ஆலையில் பதிந்த கரும்புகளை வெட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

வெறும் 21 கோடி தான் தேவைப்படுது ஆலயை திறப்பதற்கு 15 கோடி மராமத்து பார்ப்பதற்கும், 17 கோடி ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சம்பளம் போடாத தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கும் அப்படி ஒரு நிலைமை உள்ளது.

அதே நேரத்தில் இந்த ஆலையில் 110 கோடி விவசாயிகள் பணம் 10 கோடி. மின்சார நிலையம் திறப்பதற்கு 16 வருடங்களாக இரும்புகள் துருப்பிடித்து போய் சேதம் அடையக் கூடிய நிலைமையில் உள்ளது இதைப் பற்றி இந்த அரசு கண்டு கொள்வதில்லை.

இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் இருக்கிறார்கள் இதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை.

அதே நேரத்தில் மக்கள் கோரிக்கை வைக்காத திட்டங்களை செய்கிறார்கள். ரோடு போட சொல்லி கேட்கவில்லை, ரோடு போடுகிறார்கள். கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட சொல்லி யாரும் கேட்கவில்லை அதை கட்டி இருக்கிறார்கள்.

மக்கள் கோரிக்கை வைக்காத அனைத்தையும் செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என்று நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆலை ஓடினால் என்ன லாபம், என்ன நட்டம் என்று பார்க்கிறார்கள் என நினைக்கிறோம்.

இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த அரசு பரிசீலனை பண்ணி 2 லட்சம் கரும்பு இருப்பில் உள்ளது. ஆலையை இயக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் அனைத்து சங்கங்கள் கட்சிகள் அனைவரையும் இணைத்து தொடர் போராட்டத்தை நடத்துவோம் இவ்வாறு கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாய சங்க செயலாளர் கதிரேசன் பொதுச் செயலாளர் ரவீந்திரன், இளங்கோவன், மகேஸ்வரன், அடக்கி வீரணன், ராஜேஸ்வரன், அய்யாக்காளை, மொக்கமாயன் முனியாண்டி தேவர், போஸ் ராஜாமணி, முருகன் நாகராஜன் கந்தப்பன் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் ஆலை தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.