மதுரையில் தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரம் வழக்கில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டது. தனது சகோதரரை மீட்டு தர கோரி, முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து சகோதரி கனடாவில் இருந்து வீடியோ வெளியிட்டார்.
குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கடத்தப்பட்ட சுந்தரத்தை மீட்போம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்துவருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி. சுந்தரம் மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது.

இதனிடையே கருமுத்து டி.சுந்தரத்திற்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் நிலம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கருமுத்து டி. சுந்தரத்தை எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 6 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தரத்துடன் அவரது கடை ஊழியர்கள் இருந்தபோதும் பேச்சுவார்த்தைக்காக அழைத்துசெல்வதாக கூறி சுந்தரத்தை 10க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் இரவு ஆகியும் சுந்தரம் வீடு திரும்பாத நிலையில் சுந்தரத்தை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திசென்றதாகவும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர். சுந்தரத்தின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்கள. மற்றும் வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தி நேற்று 9 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் கடத்தலில் தொடர்புடையதாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அருள்செல்வம், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜனநேந்திரன், முத்துகிருஷ்ணன், விக்னேஷ், தென்காசியை சேர்ந்த அருண் , திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ் ஆகிய 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை மாநகர காவல் ஆணையர் தனிப்படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதனிடையே கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் சகோதரி விசாலாட்சி கனடாவில் இருந்தபடி, தனது சகோதரரை மீட்க முதலமைச்சர், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எனது சகோதரர் எந்த நிலமையில் எப்படி இருக்கிறார் என்ற வீடியோவையாவது காவல்துறையினர் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூகவலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து கருமுத்து டி.சுந்தரத்தை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கருமுத்து டி.சுந்தரத்தை நில விவகாரம் காரணமாக கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது