கோவை மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பிஏபி வாய்க்காலில் சுமார் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் சடலம் மிதப்பதை அப்பகுதி சிறுவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுவர்கள், உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சுல்தான்பேட்டை காவல் நிலைய போலீசாரும், பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சடலத்தின் மர்மமான மரணம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் சுல்தான்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








