• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

வக்ஃப் திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது- மு.க.ஸ்டாலின்!

ByP.Kavitha Kumar

Mar 27, 2025

மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான, நீதிமன்றத்துக்கு முரணான தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃப் சட்டத்தில் இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இதன் பின் அவர் பேசுகையில், “ வக்ஃப் சட்ட மசோதா சிறுபான்மை மக்களை வஞ்சிக்கிறது. இதற்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வக்ஃப் சட்டமானது முதல்முதலில் 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பாஜக அரசு திருத்த மசோதா தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் வாரியத்தில் அரசியல் தலையீடு, மத உரிமைகள் பாதிக்கும் விதத்தில் இருந்ததால் திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்தது. இதனால், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

வக்ஃப் சட்டத் திருத்தம் மூலம் மத்திய, மாநில வக்ஃப் வாரியத்தின் நிர்வாகத்தில் அரசின் அதிகாரம் அதிகரிக்கும். இது வக்ஃப் வாரியத்தின் சுயாட்சியை பாதிக்கும். வக்ஃப் வாரிய சொத்துகளின் நிலத்தை அளவிடும் அதிகாரம் நில அளவை ஆணையரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வக்ஃப் வாரியத்தின் முடிவு செய்யும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட சொத்துகள் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாக இருந்தாலும் வக்ஃப் சொத்தாக கருதப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு வக்ஃப் சொத்துகளை மறுவரையறை செய்யும் அதிகாரம் அளிக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களால் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் வாரியங்களை கலைக்க அதிகாரம் அளிக்கிறது.

குறிப்பிட்ட இரண்டு தரப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்க்க சட்டம் வழிவகுக்கிறது. வக்ஃப் வாரியம் பதிவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் சரிபார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பிரிவின் 26-ன் கீழ் மதச் சுதந்திரம் மீறப்படுகிறது. சிறுபான்மை முஸ்லிம் மக்களின் மத உரிமையை பறிக்கும் விதமாக இருக்கிறது.

திமுக மட்டுமின்றி நாட்டின் முக்கிய கட்சிகள் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான, நீதிமன்றத்துக்கு முரணான தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃப் சட்டத்தில் இருக்கிறது. இந்த திருத்த சட்டங்கள் வக்ஃப் வாரியத்தையே எதிர்காலத்தில் செயல்படவிடாமல் ஏற்படுத்தும். இதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டியது அவசியம்” என்றார். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி ஆகியவை ஆதரவு அளித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர்.