• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பள்ளியில் விதைப்பந்து திருவிழா..,

என்ஜிஓ ஏ காலனியில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு திருவிழா போல கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி. ஜெயமேரி தலைமை தாங்கினார்.

பள்ளி முதல்வர் அருட் சகோதரி. புனிதா நிகழ்வின் நோக்கம் மற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார். ஆசிரியை ரேவதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சமூக ஆர்வலர் திருமாறன் மரங்கள் மற்றும் பசுமையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி விதைப்பந்து நிகழ்வினை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, வரம் அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் நாகராஜன், மற்றும் எம்கேஎஸ் பேட்டரி உரிமையாளர் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து விதைப்பந்து தயாரிப்பு நிகழ்விலும் பங்கேற்றனர்.

வேம்பு ,புளி, புங்கை, நாவல், எலுமிச்சை, பேரிச்சை, பப்பாளி, சீதா, சப்போட்டா, போன்ற பல வகையான மரங்களின் விதைகளைக் கொண்டு விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டது. கே ஜி மாணவ, மாணவியர் உள்பட ஐந்தாவது வகுப்பு மாணவ, மாணவியர் வரை கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 25,000 க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. நிகழ்வில் ஆசிரியைகள் ரதி , செலின், பீமு, பேபி, விஜி, சுபா சங்கரி, தங்கம், சிவராணி, ஆரோக்கிய ஜாஸ்மின், வசந்தகுமாரி, ஆகியோர் மாணவ ,மாணவியரோடு இணைந்து விதைப்பந்துகளை தயாரித்து மாணவ ,மாணவியரை உற்சாகப்படுத்தினார்கள்.

ஐந்தாவது வகுப்பு மாணவர் இசக்கிமுத்து 1600 விதைப்பந்துகளும், மாணவர் சக்திவேல் 1500 விதைப்பந்துகளும் செய்து அசத்தினார்கள். நான்காம் வகுப்பு மாணவர் முகமது அஃபான், மூன்றாவது வகுப்பு மாணவர்கள் சேவியர் ஜாய்சன், ரியோ மார்வின், வெற்றிவேல் ஆகியோர் 500க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை தயாரித்து பாராட்டுப் பெற்றனர்.தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் உலர விடப்பட்ட பிறகு தகுதியான இடத்தில் தூவப்பட உள்ளன.