கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர்கள் பலராமன், சத்யா தம்பதியினர். இவர்களது மகன் விஷ்ருத். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தசம எண்கள் கற்று கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. அதை கற்று வந்த அவர் அதில் உலக சாதனை படைக்க முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் இன்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அவர் ஒரு நிமிடத்தில் 466 தசம எண்களை கூறி வீடியோவில் பதிவு செய்தனர். இதனை உலக சாதனை குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் விஷ்ருத் கூறுகையில், நான் முதலில் தசம எண்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கற்று கொண்டேன். பின்னர் இதில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக 9 மாதங்கள் பயிற்சி பெற்றேன். இதற்கு முன்பு பிரிட்டிசை சேர்ந்த 10 வயது சிறுவன் 280 தசவ எண்களையும், இந்தியாவில் ஐதரபாத்தை சேர்ந்த சிறுவன் 326 தசம எண்களையும், சீனாவில் 408 தசம எண்களையும், அமெரிக்காவை சேர்ந்த சிறுமி 426 தசம எண்களையும் கூறி சாதனை படைத்துள்ளனர். இதனை முறியடிப்பதற்காக நான் 500 தசம எண்களை கற்று 466 தசம எண்களை கூறியுள்ளேன். தொடர்ந்து அடுத்த உலக சாதனைக்கு முயற்சி செய்ய முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.