கோவையில் தலைக்கவசத்தை வலியுறுத்தியும் மற்றும் போதையில்லா கோவையை உருவாக்கிடவும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்டம் உடன் கோயம்புத்தூர் விழாக்குழு இணைந்து இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இச்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில், மாணவ மாணவிகள் சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தல், தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிதல், மித வேகத்தில் பயணித்தல், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடுதல் மற்றும் போதை இல்லா கோவையை உருவாக்கிட விழிப்புணர்வு பதாகைகளோடு பேரணியில் பங்கேற்றனர்.
மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஏடிஎஸ்பி சிற்றரசன், அதிகாரிகள், இப்பேரணியில் காவல்துறை உயர் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிக்குத் தலைமையேற்று அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.