புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குள் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்தன. பேரங்குளம், அசோக் நகர், கல்லூரி சாலை, திருவப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதிகள் என பகலிலும் இரவிலும் மாடுகள் நிறைய சுற்றி திரிந்தன.

சில நேரங்களில் இரவு நேரத்தில் அங்கேயே படுத்து விடுகின்றன. சாலையில் வேகமாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பல நேரங்களில் இந்த மாடுகளில் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இதனால் இதுவரை உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் பலரும் கை, கால் உடைந்து தலை உடைந்து பலரும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்து இருக்கிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் வழக்கு எதுவும் பதிவு செய்து யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்தது.
யாருடைய மாடு என்பதை கண்டறிந்து அவர்களிடம் போய் எடுத்துச் சொன்னாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. பொறுத்துப் பார்த்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாடுகளை பிடித்து வந்து நகர்மன்ற வளாகத்தில் கட்டி வைத்து அபராதமும் விதித்திருக்கிறார்கள். அபராதத்தை செலுத்தி விட்டு மீண்டும் இரவு பகலாக சாலையிலேயே மாட்டின் உரிமையாளர்கள் விட்டு விட்டனர். இது தொடர்கதை ஆகிப்போன நிலையில் விபத்துகளும் ஆங்காங்கே நிறைய நடக்க தொடங்கின.
இது குறித்து தகவல் அறிந்த இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் நாராயணன் அதிரடி நடவடிக்கை எடுத்து கடந்த வாரத்தில் மூன்று மாடுகளைப் பிடித்து வந்து ஏலத்தில் சுமார் 50,000 ரூபாய்க்கு விற்று விட்டார். அந்த நிதியை நகராட்சி கணக்கில் சேர்த்து விட்டார்.

இதை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் தற்போது கடந்த சில நாட்களாக சாலைகளில் மாடுகளை விடாமல் பாதுகாப்பாக பிடித்து கட்டி போட்டு விட்டனர். அதனால் மாடுகளால் ஏற்படும் விபத்துகள் குறைந்துவிட்டன. இதை அறிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி மோகன்ராஜ், செயலாளர் இப்ராஹிம் பாபு, முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சேட் என்கிற அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலரும் நகராட்சி ஆணையரை சந்தித்து மாடுகளை விற்றதற்கு நன்றி தெரிவித்து நாட்காட்டி வழங்கியதோடு பயனாடைகள் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதுபோல் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.




