சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் வேகமாக நீர்மட்டம் சரிந்து வருவதால் பெங்களூரைப் போல, சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வர வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சி ஆக இருக்கும் நிலையில், தற்போது 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 7.1 டி.எம்.சி தண்ணீரே உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 1.5 சதவீதம் வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டு போல் 2023 ஆம் ஆண்டு பெருமழை பெய்தும் ஏரிகள் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில், தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் அச்சத்துடன் எழுந்துள்ளது.