காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 9 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் – ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் – டாக்டர் சிவசாமி சாலை, செம்பியம் – ஜவஹர் நகர் சாலை, ஈவிஆர் சாலையில் காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வியாசர்பாடி – முல்லைநகர் பாலம், பெரவள்ளூர் – 70 அடி சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு, அம்பேத்கர் சாலையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை எந்த விமானங்களும் தரை இறங்காது என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இதுவரை 20 சென்டிமீட்டருக்கு பதில் 39 சென்டிமீட்டர் மழை பதிவானது. இது, இயல்பை விட 54 சதவீதம் அதிகமாகும். அதுபோல், சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இதுவரை 23 சென்டிமீட்டருக்கு பதில் 47 சென்டிமீட்டர் மழை பதிவானது. இது, இயல்பைவிட 77 சதவீதம் அதிகமாகும்.