புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உலக மாணவர்கள் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார் அப்துல் கலாம். எனவே, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் உலக மாணவர்கள் தினம் மற்றும் இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது.
நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக உலக மாணவர்கள் தினம் அக்டோபர் 16 திங்கட்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மூங்கில் செடி வழங்கி, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும், மூங்கில் அதிக அளவில் ஆக்சிஜன் வழங்குவது குறித்தும் விளக்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் மற்றும் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி அவர்கள் “நமது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாரேனும் ஒருவர் வாழ்வில், நாம் ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நாம் மனிதனாக பிறந்த பலன் நம்மை முற்றிலும் வந்தடையும்” என்ற அப்துல்கலாமின் உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இயற்பியல் துறை தலைவர் முனைவர் அ. ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினர். கல்லூரி தர கட்டுப்பாடு தலைவர் முனைவர் க.சரவணன், முனைவர் இரா.கபிலன், ரமேஷ் பாபு, முருகானந்தம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்துல் கலாம் வளர்ந்த விதம், அறிவியல் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகள், மக்கள் குடியரசு தலைவராக அவரின் எளிமை போன்ற பல கருத்துக்களை மாணவ மாணவிகள் அறிந்து கொண்டனர். அனைவருக்கும் கலாம் முகமூடி, டி-ஷர்ட், மூங்கில் செடி, சான்றிதழ், மெடல், தொப்பி, பாரம்பரிய 15 தானிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.