கோயம்புத்தூர், ஆகஸ்ட் 21, 2025 : கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2025 ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இப்போட்டிகள் பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றது.

இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும்; பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் திரு. பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- இவ்வாண்டு 59-வது ஆண்களுக்கான பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 23 – ம் தேதி முதல் 27 – ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடனும், தமிழ்நாடு கூடைப்பந்துகழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெறவுள்ளது.
இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாட இந்தியாவில் உள்ள சிறந்த எல்லா அணிகளும் ஆர்வமாக இருப்பார்கள். இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.
59 – வது பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் எ – பிரிவில் சென்னை – இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுதில்லி – இந்திய விமானப்படை அணி, கோவை – இராஜலட்சுமி ஹெச்எஸ்எ (HSA) போன்ற அணிகளும், பி – பிரிவில் புதுதில்லி – இந்திய இராணுவ அணி, சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி, கேரளா – கேரளா மாநில மின்சார வாரிய அணிகள் உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. குறிப்பாக இப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் 6 வீரர்கள் அவரவர் அணிக்காக விளையாடுகின்றனர்.

வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000.00 மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.75,000.00 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.50,000.00 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 25,000.00 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000.00 பரிசாக வழங்கப்படும்.
போட்டிகள் வரும் 23.08.2025 முதல் தினமும் மாலை 5.30 மணிக்கு துவங்கும். அனுமதி இலவசம். இப்போட்டிகளை பி.எஸ்.ஜி. புற்றுநோய் மைய இயக்குனர் டாக்டர். டி. பாலாஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார். கௌரவ விருந்தினராக பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர். கே. பிரகாசம் கலந்து கொள்கின்றார். பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.
ஆகஸ்டு 27 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் திரு. பவன்குமார் ஜி கிரியப்பனவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்குகிறார், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான திரு. ஜி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றார்கள்.