புதுக்கோட்டையில் தொழிற் சங்கங்களின் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஞ்சலகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய அளவில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் இன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர மன்றத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் திமுகவின் தொழிற்சங்கமான எல்பி எஃப், சிஐடியு, ஏ ஐ டி யு சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க வாதிகளும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். திமுக தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் ரத்தினம் ஏற்பாட்டில் அவரது தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தொழிற்சங்க வாதிகளுடன் துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இன்னும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் ஊர்வலத்தில் கொடி பிடித்து முழக்கமிட்டு வந்தனர். புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் வந்த போது சாலையில் அமர்ந்து அங்கேயே கண்டனம் முழக்கமிட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர், திமுக தொழிற்சங்க தலைவர் ரத்தினம் உள்ளிட்ட பலரும் விளக்க உரையாற்றினார்கள்.






