கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உற்சவரம்பு 5% என்று குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25% என்றவாறு நிர்ணயம் செய்திட வேண்டும்

வெளி முகமை, ஒப்பந்தம், தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும், மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும் என்பதை தளர்த்த வேண்டும் வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சு பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கூட்டமைப்பை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.










