2024ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி (68), சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர் பிந்தேஸ்வர் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் எம்.பத்ரப்பனுக்கு (87) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவர்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன.
கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், சிரஞ்சீவி, விஜயகாந்துக்கும், பொது விவகாரங்களில் சிறப்பாக சேவைபுரிந்தற்காக வெங்கையா நாயுடுக்கும் இந்த விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதில், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளர் பார்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆர்வலர் சாய்மி முர்மு, மிஸோரமின் சமூக ஆர்வலர் சங்தாங்கிமா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசர்கோட்டைச் சேர்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, சர்வதேச மல்லர்கம்பம் பயிற்சியாளர் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே என 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.