

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தி.மு.க, பாஜக என இரு கட்சியினரும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பல கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த திமுகவினர் ‘ஒன்றிய அரசே நாங்க மிசாவையே பார்த்தவங்க் பயம் எங்க பயோடேட்டாவுலேயே இல்ல’ என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியிருந்தனர். இன்று இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘சிறைபட்டது அணில் அடடே’ ‘திராவிட மாடலே நீங்க மிசாவை தானே பார்த்தீங்க அமித்ஷாவை பார்த்ததில்லையே’ என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியதோடு அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை இழிவுபடுத்தும் விதமாகவும் புகைப்படங்கள் இருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


