தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளை முதல் வீடு, வீடாக வழங்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை (ஜன. 3) முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரேநேரத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளைமுதல் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்.