கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( 53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் பயணம் செய்து கோவையில் தங்கள் பொருள்களுடன் இறங்கினர். அனைவரும் நுழைவாயிலுக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கொண்டு வந்த ஒரு கைப் பையை எடுக்க மறந்து விட்டனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மணிகண்டன் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த போது ஒரு கைப் பையைக் கவனித்தார். மேலும் அந்த பைக்குள் சில விலை உயர்ந்த நகைகள் இருப்பதை பார்த்தார். உடனடியாக, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அலுவலகத்திற்கு அந்த பை கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரவிக்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, பை காணாமல் போனதைக் கவனித்த, உடனடியாக கோவை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அதே நேரத்தில் அந்தப் பையில் இருந்த ஒரு செல்போன் ஒலித்தது. அதில் ரவிக்குமார் தனது பை தொலைந்து விட்டதாக பேசி இருக்கிறார்.
உடனே ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு வருமாறு கூறினர். பின்னர் ரவிக்குமார் கூறிய அடையாளங்களை வைத்து அந்த பை அவருடையது தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அதில் மொத்தம் 50 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் செல்போன் ஆகியவை இருந்தது. நகை , பணம், செல்போன் இருந்த அந்த கைப்பையை போலீசார் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.