கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள தாபா ஹோட்டல்களில் தமிழக அரசின் மதுபானம் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, சிறப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தாபா ஹோட்டல்களிலும், சூலூரில் கௌபாய் ரெஸ்டாரன்ட், டால்ஃபின் ரெஸ்டாரன்ட், வடுகை, லவ்லி, ப்ளூ லைன் உள்ளிட்ட பிரபல ரெஸ்டாரன்ட்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின் போது, சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதுடன், தென் மாவட்டங்களிலிருந்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் தாபா ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார்களா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தினர்.
அரசின் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ள போலீசார், சட்டவிரோத மது விற்பனையை தடுப்பதற்கும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாக இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளனர்.