கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த கட்டிடம் பல்வேறு துறைகளில் அனுமதி சான்று, தடையில்லா சான்று பெற்று இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொங்கலுக்கு முன்பு இந்த நூலகத்தை திறக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நூலகத்தை கலைஞரின் குருநாதரான பெரியார் பெயரிலேயே அமைக்கலாம் என்று முதல்வர் அறிவித்து பெரியார் நூலகம் என்ற அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொங்கலுக்கு முன்பு எந்த தேதியில் திறக்கலாம் என்று முதல்வர் இசைவு தருகிறாரோ அப்போது முதலமைச்சரால் இந்த நூலகம் திறக்கப்படும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அவிநாசி உயர்மட்ட மேம்பாலம் நான்காண்டுகளில் கட்டி முடித்திருக்க வேண்டும் ஆனால் ஒன்பது மாத காலம் தாமதம் ஆகிவிட்டதாக தெரிவித்த அவர் அதற்கு காரணம் பல்வேறு சிப்டிங் பணிகள், மின்சார இணைப்புகள், நில எடுப்பு பணிகள் ஆகியவற்றால் தாமதமானதாக தெரிவித்தார். 1791 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கட்டப்பட்டு வருவதாகவும், அதேசமயம் விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை ஆகிய நான்கு இடங்களில் ஏறுபாலம் இறங்கு பாலம் அமைக்கப்படும் என்றும் அதனால் போக்குவரத்து எளிதாகும் என தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதலமைச்சர் கோவைக்கு வருகை தர உள்ள நிலையில் அப்பொழுது அந்த பாலத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டதாகவும் இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து விடுவோம் என்று ஒப்பந்ததாரர் கூறி இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ஏ.வ.வேலு முதலமைச்சர் அக்டோபர் ஒன்பதாம் தேதி கோவைக்கு வருவதாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினமே பாலத்தை திறப்பதற்கு ஏற்பாடு செய்வோம் என்றார்.
மேலும் இந்த மேம்பாலம் கட்டுவதற்கு கால தாமதம் ஆக முக்கிய காரணம் ரயில்வே துறை என தெரிவித்த அவர், ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி பொறியியலாளர்களை வைத்து ஒப்புதல் அளித்த பிறகு தான் ரயில்வே பகுதியில் பாலங்கள் கட்டப்படும் என்றார்.
அவிநாசி மேம்பாலத்தில், தனியார் ஹோட்டல் அருகே தூண் வருவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், தனியார் ஹோட்டலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதனை நாங்கள் சந்தித்து தான் வருகிறோம் என்றும், அது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் விளக்கமும் அளித்துள்ளோம் அதற்காக எல்லாம் இந்த பாலம் திறப்பு தடையாகாது என கூறினார். அந்த வழக்கு முடியும் போது அங்கு இறங்கு பாலத்தை நாங்கள் அதற்கு ஏற்ப அமைத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், பொதுப்பணித்துறை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டிடத்துறை நீர் மேலாண்மை துறை அதில் எந்த அளவிற்கு காலிப்பணியிடங்கள் உள்ளது என்று அந்த அமைச்சரை தான் கேட்க வேண்டும் என கூறினார்.