• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பிப்ரவரி 12ஆம் தேதி உசிலம்பட்டி பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி – விழா கமிட்டியினர் முடிவு..,

ByP.Thangapandi

Jan 3, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ளது தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் திருக்கோவில்., நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இந்த கோவிலின் புரணமைப்பு பணிகளுடன் பழமை மாறாமல் ஆதி வழக்கப்படி நடத்தப்பட்டு வரும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர் மேடைக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், கும்பாபிஷேக விழா நடத்துவது மற்றும் பாரம்பரியம் மாறாமல் பழமை வாய்ந்த இந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் நடத்துவது தொடர்பாக புத்தூர் நாட்டைச் சேர்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் எல்லைக்குட்பட்ட நல்லுத்தேவன்பட்டி, பூச்சிபட்டி, இ.புதுப்பட்டி, மாலைப்பட்டி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கணூர் உள்ளிட்ட 50க்கும் கிராமங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன், தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் வாரிசுதார்கள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு செய்யப்பட்ட ஜக்கம்மாள் கோவிலில் வரும் பிப்ரவரி 10,11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், அடுத்த நாளான பிப்ரவரி 12ஆம் தேதி பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அரசின் ஒத்துழைப்புடன் நடத்துவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி பல ஆண்டுகளுக்கு பின் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பாரம்பரியம் மாறாமல், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் உசிலம்பட்டி பகுதியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.