கோவை அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபல கல்லூரியான
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.
அவினாசி சாலையின் இரு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் நிலையில் சாலையின் நடுவே மாணவர்கள் சென்று வர இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கல்லூரியில் படித்து முடித்த லட்சகணக்கான மாணவர்களின் கல்லூரி கால நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கும் இடமாகவும் இந்த பாலம் இருக்கின்றது.
இந்நிலையில் அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி 1,627 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பி.எஸ்.ஜி.கல்லூரியின் இரு வளாகங்களையும் இணைக்கும் விதமாக இருந்த இரும்பு பலமானது நேற்று இரவு அகற்றப்பட்டது.
மேலும் மாணவர்கள் சாலையை கடப்பதற்காக பி.எஸ்.ஜி தொழில்நுட்பகல்லூரி முன்பு, புதிய சிக்னலும் திறக்கப்பட்டது.
இதுவரை அவிநாசி சாலையை இரும்பு பாலத்தின் வழியாக கடந்த கல்லூரி மாணவ, மாணவியர் தற்பொழுது சாலையை கடந்து வளாகத்திற்கு செல்கின்றனர்.
மேம்பாலம் கட்டுமானப் பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் மாணவர்கள் அவனாசி சாலையை கடக்கும் விதமாக இரும்பு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.