தென்னாப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தியாவிலும் ஒமிக்ரான் வகை பாதிப்பு பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பரவியது கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் பெங்களூருவில் ஒருவருக்கு மட்டும் அதற்கான அறிகுறி தென்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோய் துறை தலைவர் சாமிரன் பாண்டா இது குறித்து கூறியதாவது, இந்தியாவில் ஏற்கனவே ஒமிக்ரான் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த நவம்பர் 9ஆம் தேதி தான் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
அங்கிருந்து வந்த பயணிகள் மூலம் ஒமிக்ரான் இந்தியாவில் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தும் போதுதான் இது தெரிய வரும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. யாருக்காவது இதன் தொற்று ஏற்பட்டு இருந்தால் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.