• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

புதிய விரிவான சிற்றுந்து திட்டம்..,

ByM.S.karthik

Jun 17, 2025

மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 26 சிற்றுந்து (MINI BUS) வழித்தடங்களுக்கான அனுமதி ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளிலும், ஏற்கனவே உள்ள பேருந்து தடங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சிற்றுந்துகளை இயக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம், பொதுமக்கள் கிராமங்கள் /குக்கிராமங்கள் / குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்து சேவை மூலம் சிரமம் இன்றி விரைவாக பயணிக்க முடியும்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் அதிகபட்சமாக 25.கி.மீ. ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் (Unserved Route Length) சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக் கூடாது. பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும்.

இப்புதிய வழிதடத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும். சிற்றுந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும் மேலும் மினி பேருந்தின் Wheel Base 390 Cm -க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலையப் பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் தற்போது 4 நடைகளுக்கு குறைவாக பேருந்து சேவை உள்ள தடங்களும் இத்திட்டதில் பேருந்து சேவை இல்லாத தடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக 26 புதிய சிற்றுந்து வழித்தடங்கள் துவங்கி வைக்கப்படுகிறது. மேலும் 31 நிலுவையில் உள்ள சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தடங்களுக்கு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ள விண்ணப்பதார்களுக்கு உரிமை மாற்றம் செய்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளன. மதுரை மாவட்ட எல்லைக்குட்ட பகுதிகளில் மேலும் புதிய வழிதடங்களில் சிற்றுந்து இயக்க ஆய்வு செய்யப்பட்டு விரைவில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவர்கள் இணை போக்குவரத்து ஆணையர் சத்திய நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கார்த்திகேயன்,பாலமுருகன், சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மதுரை மாவட்டத்தில் திருநங்கையர் நலனுக்காக அரண் என்னும் பெயரில் தங்கும் இல்லம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இல்லத்தை நடத்துவதற்கு கீழ்கண்ட தகுதிகள் உடைய அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்
• திருநங்கையர் நலனிற்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை செயல்பட்டு வரும் நிறுவனம்.
• திருநங்கையர் நலனிற்காக கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களின் விவரங்கள், பயனாளிகள் எண்ணிக்கை மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.
• திருநங்கையர்கள் தலைமையிலான அல்லது திருநங்கைகள் பெரும்பான்மையாக உள்ள நிர்வாகக் குழுவைக் கொண்ட தொண்டு நிறுவனங்கள்.
• திருநங்கையர்களுக்கான இல்லமானது பாதுகாப்பானதாகவும், நன்கு பராமரிக்கப்பட்ட தாகவும், சரியான சுகாதாரம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். பல்வேறு திறன் பயிற்சி / வெளிப்புற செயல்பாடுகளுக்கு போதுமான இடம் இருக்க வேண்டும்.
• நிறுவனத்தின் நிர்வாக அலுவலர்கள் முறையான பின்னணி சரிபார்ப்புக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
• இந்திய சட்டங்களில் ஏதாவது ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
• தகுதிவாய்ந்த ஆற்றுப்படுத்துநர்/மனநல ஆலோசகர் இல்லத்திற்கு வாரந்தோறும் மற்றும் தேவைக்கேற்ப வருவதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உடைய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை 18.06.2025 முதல் 24.06.2025 தேதி வரை மாவட்ட சமூகநல அலுவலகம், புதிய கட்டிட வளாகம் 3-வது தளம், மதுரை-20 என்ற முகவரிக்கு நேரில் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.