ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. செப்.22 முதல் 30 ஆம் தேதி வரையிலான 9 நாட்களும் லிங்க பைரவி வளாகத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன, சூர்ய குண்ட மண்டபத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியுடன் கோலாகலமாக நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈஷாவில் நவராத்திரி விழா திங்கள்கிழமை ப்ராஜக்ட் சம்ஸ்கிருதி கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (23/09/2025) சத்குரு ஞானோதயம் அடைந்த திருநாளையொட்டி, ஆதியோகி ஆலயத்தில் சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம் நிகழ்ச்சியும் சவுண்டஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

புதன்கிழமை( 24.09.2025) இந்துமதி மற்றும் அவரது குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, வியாழக்கிழமை (25.09.2025) பிரஜாக்தே சுக்ரே என்பவரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இன்று (26.09.2025) அம்பி சுப்பிரமணியத்தின் கர்நாடக வயலின் கச்சேரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை (27.09.2025) ப்ராஜக்ட் சம்ஸ்கிருதியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியக் கலை நிகழ்ச்சியும், திங்கள்கிழமை (29.09.2025) மெகபூப் அவர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை (30.09.2025) ப்ராஜக்ட் சம்ஸ்கிருதியின் ‘மார்கம்’ என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஈஷா யோக மையத்தில், நவராத்திரியை முன்னிட்டு, சூர்ய குண்ட வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் தான் அனைத்து இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம்.
சூர்ய குண்ட மண்டபத்துக்கு எதிரே “ஹேண்ட்ஸ் ஆப் கிரேஸ்” என்ற தலைப்பில் கைவினைப் பொருள்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், கைத்தறி நெசவு துணிவகைகளும், கைவினைப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரியை முன்னிட்டு 9 நாள்களும் லிங்கபைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.