புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நாளை தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பால் குடம் எடுத்தும், அழகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், பறவை காவடி எடுத்தும் கரும்புத் தொட்டில் கட்டியும் தங்கள் நேற்று கடனை செலுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேல தாளங்கள் முழங்க கோயிலை நோக்கி வந்து கொண்டு உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்துவரும் நிலையில், பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது, இதே போன்று பல இடங்களில் அறுசுவை அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதிக அளவில் கூட்டம் காணப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாக வழிபாடு செய்யக் கூடிய வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



