கோவை புறநகர் பகுதிகளான நரசிம்மநாயக்கன் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோவை புறநகர் பகுதிகளான நரசிம்மநாயக்கன்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், தொப்பம்பட்டி, வடமதுரை, என். ஜி. ஜி. ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. புறநகர் பகுதிகளில் பெய்த மழை விவசாய பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புறநகர் பகுதிகளில் உள்ள குளங்களும் தொடர்மழை காரணமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.