• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை, அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

BySeenu

Jan 11, 2024

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் .சு.முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தெரிவித்ததாவது.., கோவை மாநகராட்சியில் தற்பொழுது 10 பேட்டரி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பேட்டரியை பயன்படுத்தி ஓடும் இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் 68 சதவீதம் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் 760 பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் 445 பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர் என்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் எனறும் குறிப்பிட்டார்.
மேலும் பொது மக்கள் வீடு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். புயலின் காரணமாக காஞ்சிபுரம், சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகளவில் பெய்த போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டுவரப்பட்டதாகவும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான் மழை நீர் சாலையில் தேங்கியதாகவும் விளக்கமளித்தார். முதல்வரால் தொடங்கி வைக்க்கப்பட்ட பொங்கல் பரிசு பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டு வரும் சூழலில் வருகிற 14 ந் தேதி வரை தொடர்ந்து பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் நிதி பிரச்சனை இருந்தும் யாரும் விடுபடக் கூடாது என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார் என கூறியதுடன், கோவை மாவட்டத்தில் 1537 கடைகளுக்கு 122.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 20 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளதாகவும் 636 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதன் மூலம் 27 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்றும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் சுட்டிக்காட்டினார்.மேலும் கொரோனா நோய் தொற்றை பொருத்தவரை கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருவதாகவும் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.பொங்கல் பண்டிகையையொட்டி மதுபான விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என கூறிய அவர், டாஸ்மாக்கில் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை எனவும் மது குடிப்பவர்கள் வேறு எங்கும் போகக்கூடாது என்பதை மட்டும் கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். இதேபோல் டெட்ரா பாக்கெட் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதன் பிறகு தான் முடிவு எடுப்போம் எனவும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார். வீட்டுவசதி வாரித்தின் கீழ் பத்திரம் இல்லாமல் இருக்கும் வீடுகளை யாரிடம் நாங்கள் ஒப்படைப்பது என்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.