• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மாரத்தான் போட்டி வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!

BySeenu

Feb 1, 2026

கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில், மனித சகிப்புத்தன்மையின் எல்லைகளை சோதிக்கும் (Endurance) இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ (Backyard Ultra) மாரத்தான் போட்டியின் 2-ம் பதிப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 123 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 7 மாநிலங்களை சேர்ந்த 112 வீரர்கள் களத்தில் இறங்கி ஓடத் தொடங்கியுள்ளனர். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பேக்யார்டு அல்ட்ரா நிகழ்வாகும்.

போட்டியின் வடிவம் என்ன? (Last Person Standing) இது வழக்கமான மாரத்தான் போட்டி போன்றதல்ல. எல்லைகள் அற்ற, ‘கடைசி நபர் எஞ்சும் வரை’ நடைபெறும் ஒரு வித்தியாசமான போட்டியாகும். போட்டியாளர்கள் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை 6.7 கி.மீ தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.

ஒரு மணிநேரத்திற்குள் முடிக்கத் தவறியவர்களோ அல்லது அடுத்த மணிநேரத்திற்கான விசில் ஒலிக்கும்போது தொடக்க கோட்டில் இல்லாதவர்களோ தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். கடைசியாக ஒருவர் மட்டும் எஞ்சும் வரை இந்த ஓட்டம் இரவு பகலாக தொடரும். வெற்றியாளருக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இந்த ஆண்டின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது ‘சில்வர் டிக்கெட்’ (Silver Ticket) அந்தஸ்து பெற்ற போட்டியாக நடக்கிறது. இதில் வெற்றி பெறும் ‘கடைசி நபர்’, உலக அளவில் நடைபெறவுள்ள ‘உலக அணிகள் சாம்பியன்ஷிப்’ போட்டியில் ‘டீம் இந்தியா’ (Team India) சார்பில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறுவார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில், கோவையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் 37 மணிநேரம் தொடர்ந்து ஓடி (சுமார் 248 கி.மீ) வெற்றி பெற்றார். இம்முறை, 52 மணிநேரம் என்ற தேசிய சாதனையை முறியடிப்பதே வீரர்களின் இலக்காக உள்ளது.

குமரகுரு கல்லூரியின் முன்னாள் மாணவர்களான பிரேம், நிதின் மற்றும் ஜீவ பிரசாந்த் ஆகியோர் நிறுவிய ‘பேட்டில்கிரவுண்ட்ஸ் கோயம்புத்தூர்’ (Battlegrounds Coimbatore) அமைப்பு இதனை நடத்துகிறது. கோவையை உலகத்தரத்திலான சகிப்புத்தன்மை விளையாட்டுகளின் மையமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.