புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு புது மாதிரியாக தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் சட்டமன்றத்தில் ஆறு தொகுதிகளிலும் அரசு அதிகாரிகளை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலை நிகழ்ச்சிகள், பதாகை ஏந்தியதுடன் முழக்கங்களுடன் ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், கோலப்போட்டிகள், கும்மி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகளை தேர்தலுக்கு 100% வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு அதிகாரிகளைக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ஹெச். எம். குழந்தைசாமி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகளும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் உள்ள அனைத்து நிலையிலும் பணியாற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் இளம்பெண்கள் உள்ளிட்டோர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் ஓட்டப்பந்தயமானது மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி மாலையீடு, அரிமளம் விலக்கு ரோடு, டிவிஎஸ் கார்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கை வந்து சேர்ந்தது.




