“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வருகிற 20ம் தேதி கயத்தாறு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கயத்தாறு வட்டத்தில் 19.11.2025 அன்று தங்கி முகாமிட்டு கயத்தாறு வட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள். அன்றைய தினம் மதியம் 2.30 முதல் 4.30 வரை மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்வார்.

அதன் பின் மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முற்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டு அறிவார்கள். மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உள்ளார்கள். அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 20.11.2025 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.




