• Fri. Apr 26th, 2024

தெர்மகோல் விட்டு தமிழகத்தை அலற விட்டீங்க- பாஜக நிர்வாகி விமர்சனம்

ByA.Tamilselvan

Jun 7, 2022

கடந்த சில நாட்களாக ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக ,பாஜக கட்சியினரிடையே கடும் வாக்குவாதமும்,மாறிமாறி விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாஜக நிர்வாகி பேசியதாக கூறப்படும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்த இடமான எதிர்க்கட்சி யார் என்பதற்கு அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் அனைத்தும் தாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என கூறிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக இடையே தற்போது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உரசல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், பாஜக தலைமை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென கூறி வருகின்றனர்.
அண்மையில் அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும் பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது ஒன்றிய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியிருந்தார்.
பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம். தமிழ்நாட்டில் அதிமுகதான் எதிர்க்கட்சி யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அதிமுக தயார். மற்ற கட்சியினர் தயாரா. நாங்கள் காக்கா கூட்டம் இல்லை கொள்கை கூட்டம். இரைகளை போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரைகள் முடிந்து விட்டல் பறந்து விடும் என கூறினார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது அதிமுக, பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செல்போனில் பாஜக நிர்வாகி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
அந்த உரையாடலில், ஹலோ என்கிறார் அதற்கு யாரு என்று கேட்கிறார். அதற்கு அவர் செல்லூர் ராஜூ அண்ணனா என்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்றவுடன், அண்ணே வணக்கம் சுரேஷ்குமார் பேசுகிறேன். அண்ணனுடைய பேட்டி பார்த்தேன், அதில் அவங்க தூணை போட்டால், நாங்கள் துரும்பா போட்டிருவோம் என்று கூறியிருந்தீர்கள். உண்மையில் அது பெரிய இதுனே.. நல்லா இருந்ததுனே என்று கூறிவிட்டு அண்ணே ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில்ல திருநீர் ஏதோ விற்றுக் கொண்டு இருந்தீர்களோ என்று கூறினார்.
திருநீர் கடை இல்லை பிரசாத கடை கொஞ்ச நாள் என்று கூறுகிறார். அதன்பிறகு அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி சரியாண்ணே, நீங்க ஒரு 3ஆம் வகுப்பு படித்த ஒரு ஆள், நீங்க என்னவெல்லாம் சாதனை பண்ணீங்க.. என்னெல்லாம் செய்தீங்க என்பது எல்லாம் தெரியும். தெர்மகோல் விட்டு தமிழகத்தை அலற விட்டீங்க, நீங்கள் அவ்வளவு பெரிய விஞ்ஞானி சரியாண்ணே என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாகவும் சமகவலைளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *