மருத்துவ துறையில் உயிர் காப்பதில் தீவிர மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் என அனைவரும் ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை கே.ஜி. மருத்துவமனையில், கே.ஜி மருத்துவமனையில் எமர்ஜென்சி மற்றும் கிரிட்டிகல் கேர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற இதில், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ ஜி.பக்தவத்சலம் தலைமை தாங்கினார். துணை தலைவர்களான, அசோக் பக்தவத்சலம், வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டார். முன்னதாக விபத்து காய சிகிச்சை, பக்கவாதம், மாரடைப்பு, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை என தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முக்கியத்துவங்களை பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் பக்தவத்சலம் எடுத்து கூறினார். குறிப்பாக கொரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றியதை நினைவு கூர்ந்த அவர், உயிர் காப்பதில் தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவில், பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், ஆபரேட்டர்கள், எலக்ட்ரிசியன்கள் என அனைவரது பங்களிப்பு குறித்து, நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, எமர்ஜென்சி மெடிசின் குறித்து விரிவுரைகள் வழங்கிய டாக்டர் ஸ்ரீநாத், டாக்டர் செந்தில், டாக்டர் சரவணன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, எமர்ஜென்சி பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் மருத்துவர் பக்தவத்சலம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.