சென்னை எழும்பூரில், இயக்குநர் பா. இரஞ்சித் துவக்கியிருக்கும் ‘நீலம் புக்ஸ்’ என்ற புத்தக விற்பனையகத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்றுகாலை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகம், அனைத்துவிதமான கலை, பண்பாட்டு, இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது
இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது, “நேற்றுதான் நான் கமல் சாரை சந்தித்து, “இந்த நிகழ்ச்சிக்கு வர முடியுமா..?” என்று கேட்டேன். ஆனால் நான் தைரியமாக சென்றேன். காரணம் கமல் ஸாரை நான் சினிமா நிகழ்ச்சிகள் எதுக்கும் இதுவரைக்கும் அழைத்ததில்லை.
புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததுதான் என்னை சினிமாவை நோக்கி நகர்த்தியது. அப்படி வாசிக்கும்போது நமக்கு மிகப் பெரிய ஆளுமைகள் மீது நமக்கு ஆர்வம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருவராகத்தான் நான் கமல் ஸாரை பார்க்கிறேன்.
கமல் ஸாரின் சினிமாக்களை கட்டம் கட்டமாக பிரித்தாலே, நாம் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும். எனக்கு அவருடைய எழுத்து பாணி பெரிய வியப்பை உண்டாக்கி இருக்கிறது., குறிப்பாக ‘விருமாண்டி’ படம். அவர் அந்தப் படத்தில் அப்படியான கட்டமைப்பை உருவாக்கினார்? எப்படி அவரால் அந்த வாழ்க்கையை உள் வாங்க முடிந்தது? என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அதே போலதான் ‘மகாநதி’யும்..!
யதார்த்த சினிமாவை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் கமல் ஸாரின் பங்கும் மிக முக்கியமாக இருப்பதாக நான் பார்க்கிறேன். அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார். எல்லோரும் டிஜிட்டல் சினிமாவை கையிலெடுக்க பயந்த காலத்தில், முதன்முதலில் டிஜிட்டலை கையில் எடுத்தவர் கமல்ஹாசன்.
புத்தகங்கள் சாதாரண விஷயமல்ல குறிப்பாக அம்பேத்கரை நான் வாசித்த பின்னர்தான் நான் யார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் என்னுடைய படைப்புகள் ஒரு மனிதன் தன்னை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை நிச்சயமாக புத்தகங்கள் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.வீடியோவைவிடவும் எழுத்து பவர் ஃபுல்லானது என்று நான் நம்புகிறேன். எழுத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால் திரைப்படமாக மாற்ற முடியாது. இங்கு அரசியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இருக்கும்…” என்றார் பா.ரஞ்சித்.