வேடசந்தூரில், செவ்வாயன்று நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்!
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெற்று வருகிறது! உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரித்துவார் உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் சற்று அதிகமாகவே உள்ளது!
காலம் காலமாக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் மதசார்பற்ற இந்திய நாட்டில் பாஜக ஆர்.எஸ்.எஸ் பிரிவினர், வன்முறை குறித்து பேசுவதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நான் கண்டிக்கிறேன். ஆனால் இச்சம்பவங்கள் குறித்து, பிரதமர் மோடி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது!
மேலும், இந்த சம்பவங்களுக்கு பின்னால் மத்திய அரசாங்கமே இருக்கிறது என்பது தான் எங்களுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் எப்படி திமுக தலைமையில் எல்லா மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறார்களோ, அதே போல இந்தியாவில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா மதசார்ப்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்!
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஊழல்கள் குறித்து திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 20 கோடி பெறுமானமுள்ள அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்!
பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்!