தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் பாண்டியன் (வயது55) இவருக்கு சொந்தமான தகர செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தகர செட்டில் அரசு அனுமதி இன்றி சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டதும் மேலும் 195 பெட்டியில் முழுமை அடைய சரவெடிகள், வெள்ளத் திரிகள், ஆயிரம் வாலா சரவெடிகள் 53 பெட்டிகள், மற்றும் முழுமையடையாத பூச்சட்டி வெடிகள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக வருவாய்த்துறையினர் தகரசெட்டினை சீல் வைத்து சாவியை வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு சாத்தூர் ஜே. எம். 2. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்ற தலைமை எழுத்தர் தலைமையில் வெம்பக்கோட்டை போலீசார் சீல் வைத்திருந்த தகர செட்டை பார்வையிட சென்றபோது அங்கு இருந்த பட்டாசுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டதில் தகர செட்டின் உரிமையாளர் கணேச பாண்டியன் தகரசெட்டில் இருந்த பட்டாசுகளை திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக சக்தி கணேசன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




