
ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (26.09.2023) செவ்வாய்க்கிழமை பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து வைத்து, கிராம ஊராட்சிக்கு பொது மக்கள் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம் மற்றும் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம், ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின், தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ் தமிழ் பரப்பும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினையும் தொடக்கி வைத்தார்.
