சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளான சோனி, விநாயகா நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பட்டாசுகள் லாரி செட் நிறுவனங்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி எய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது. அதனடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை உயரதிகாரிகளும், அலுவலர்களும் சிவகாசியில் முகாமிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கட்டுக் கட்டாக சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரி துறையினரின் இந்த சோதனை, இரவு முழுவதும் தொடரு மெனவும், இன்னமும் இரண்டு நாட்களுக்கு நடைபெறலாமென்றும் வருமான வரி துறை வட்டாரத்தினரிடையே கூறப்படுகிறது.