கோவை-திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று முதல் தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சி ஐ டி யு தொழிற்சங்க கூட்டமைப்பினர் இணைந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் வலியுறுத்தி பணிமனை முன்பாகவே சட்டையை கழட்டி அரை நிர்வாண கோலத்தில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியபோதும் அதனை ஏற்காத தொழிற்சங்கத்தினர் அதே பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.