கோவை புரூக் பீல்டு எதிரே உள்ள பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இன்று இடித்து அகற்றப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை புரூக்பீல்ட்ஸ் காமராஜபுரம் சிஎம்சி காலனிக்கு செல்லும் பொதுப் பாதையை கடந்த 30 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்ததாக தனியார் நிறுவனத்திற்கு எதிராக புகார் எழுந்தது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி கமிஷனர் கடந்த 2022ம் உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
அந்த தடை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. நீதிபதி சுப்ரமணியம் ராஜசேகர் அமர்வில் நடைபெற்ற விசாரணையில், கோவை காமராஜபுரம் சிஎம்சி காலனிக்கு செல்லும் பொது பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 21 சென்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 கடைகள் இன்று 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த பணிகளை 1 நகரமைப்பு அலுவலர், 2 உதவி நகரமைப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டனர். இதன் மூலம் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளது.