பிற மொழி பேசக்கூடிய மக்களை இந்திவாலாக்களாக மாற்ற முயற்சி செய்யும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு ஒரு போதும் நடக்காது என சென்னை விமானநிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வியாட்நாமில் உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பி உள்ளேன். வியாட்நாம் பகுதிகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதை அறிஞர்கள் கூறினர். வரலாற்று தளத்தை காண கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தி ஒரு சில மாநிலங்களில் தான் பேசப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இந்தி தேசிய, அலுவல் மொழியாக மாற வேண்டும் என்பது இந்தி பேசக்கூடியவர்களின் எண்ணமாக செயல் திட்டமாக இருக்கிறது. இந்தியும் ஒரு பிராந்திய மொழி தான். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை பிராந்திய மொழி என சொல்கிறார்கள். இந்தி ஒரு பிராந்திய மொழி என்பதை மறுந்துவிட்டு பேசுகின்றனர்.
பிற மொழி பேச கூடிய மக்கள் மீது திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை என தர்மேந்திர பிரதான் இப்போது விளக்கம் சொல்லி இருக்கிறார். ஆனால் நடைமுறையில் 3வது மொழி இந்தி தான் என மத்திய அரசு நடத்துகிற கல்வி நிறுவனங்களில் இருக்கிறது. மாநில அரசு நடத்துகின்ற நிறுவனங்களில் கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. பிஎம் ஸ்ரீ என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை நிறுவுகின்றனர். அந்த பள்ளி கூடங்களில் தாய்மொழி, ஆங்கிலம், 3வதாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என்று கூறுகின்றனர். இந்தி பேசக்கூடியவர்கள் 3வது மொழியாக எந்த மொழியை பேசுகின்றனர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழியை தான் கற்கிறார்கள். பிற மொழி பேசக்கூடியவர்கள் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் கட்டாயமாக கற்க வேண்டும் என்று முயற்சியை செய்து வருகிறார்கள். பா.ஜ.க. அரசு ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பது போல் ஒரே தேசம் ஒரே மொழி என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். ஏதேனும் ஒரு இந்திய மொழி மட்டும் அல்ல அயல் நாட்டு மொழியை கற்க திறமை வளர்க்க கூட உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் பிராஞ்ச் மொழியை கூட கற்று கொள்கிறார்கள். அது தனி நபரின் விருப்பம். ஆனால் தேசிய கல்வி கொள்கையில் ஒரு நிலைப்பாட்டை வைத்து கொள்கை அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்கள் மீது திணித்து 10 ஆண்டுகளுக்கு பின் இந்தி அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்களை இந்திவாலாக்களாக மாற்ற கூடிய நோக்கம். இதை தான் எதிர்க்கிறோம். ஆனால் மத்திய அரசு பிடிவாதத்தில் இருந்து இறங்கவில்லை. மாறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரை இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் இருக்காது.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணியில் இருப்பதாலேயே கருத்துக்கு இணங்கி போக வேண்டும், மொழி கொள்கையில் இணங்கி போக வேண்டும் என்பதில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே தான் திமுக உள்பட கூட்டணி கட்சிகள் வலியுறுத்துகிறோம். பா.ஜ.க.விற்கும் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் தான். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தி திணிப்பு நடந்து இருக்கிறது. அப்போதும் எதிர்த்து இருக்கிறோம். மீண்டும் காங்கிரஸ் வந்து இந்தியை திணித்தால் அப்போதும் எதிர்ப்போம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல. இந்தி அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்கள் மீது ஏன் திணிக்க வேண்டும்.
அண்ணாமலை விதாண்டவாதம் பேசுகிறார். அவரது அரசியலை நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகிறார். கர்நாடகாவில் இருந்தால் கன்னடன் என்பார். தமிழ் நாட்டில் இருந்தால் தமிழன் என்பார். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு சென்றால் இந்து என்பார். பல வேடம் போடக்கூடியவர் அண்ணாமலை. அண்ணாமலை பேச்சுக்கு தமிழ் நாட்டில் யாரும் முக்கியத்துவம் தர மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.