• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Oct 5, 2025

நற்றிணை: 003

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

பாடியவர் – இளங்கீரனார் திணைபாலை

பொருளுரை:

நெஞ்சே! பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும் ஆகாயத்தின்மேற் செல்லுகின்ற நெடிய கிளைகளையும்; பொரிந்த அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலின்கண்ணே; கட்டளைக் கற்போன்ற அரங்கை வட்டினாலே கீறி; ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள், நெல்லியங்காயை வட்டாகக்கொண்டு பாண்டிலாடா நிற்கும்; விற்போரால் ஆறலைத்துண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பினையுடைய சீறூரையுடைய; அழற் சுரத்தின் கண்ணே முற்பட்டு வந்த நம் வலியனைத்தையும் குறைக்கின்ற மாலைப் பொழுதைக் கண்டு; இம் மாலையானது கருதிய வினை முடித்தாற் போன்ற இனிமையையுடைய நம் காதலி; மனையகத்து மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி அதன் முன்னின்று அவர் தாம் இன்னும் வந்தாரில்லையே யென்று அவ்விளக்கொடு வெறுத்துத் துன்புற்றுக் கருதுகின்ற பொழுதாகும் என்று; யான் முன்னம் ஒரு காலத்து நினைத்தேன் அல்லனோ? அங்ஙனமாக இப்பொழுதும் பொருளீட்டுமாறு ஒருப்படுத்தி என்னை வருத்தாதேகொள்; இனி யான் வாரேன் காண்.