நற்றிணைப்பாடல்: 318:
நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?
பாடியவர்: பெருங்கடுங்கோ திணை: பாலை
பொருள்:
ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்.