நற்றிணைப் பாடல் 291:
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,
கண்டாங்கு உரையாய்; கொண்மோ பாண!
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?
பாடியவர் : கபிலர்
திணை : நெய்தல்
பொருள் :
நீர் இடம் பெயர்ந்து வற்றிப்போன குளத்தில் சேற்று நீரில் (அள்ளல்) எண்ணெய்ப் பசை கொண்ட தலைப்பகுதியை உடைய கொழுத்த மீனை அருந்துவதற்காகக் குருகு இனம் அரசர் படை தங்கியிருப்பது போல, குவிந்திருக்கும் மணல் மேட்டில் நிறைந்திருக்கும் அலை மோதும் துறைநிலப் பகுதியின் தலைவன் என் கணவன். பாண! என் நிலைமையை நீ இங்குக் காண்பது போல எடுத்துச் சொல்வாயாக. முள்ளூர் மன்னன் (காரி) குதிரைமேல் சென்று இரவு வேளையில் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றபோது, ஆனிரைகளை இழந்த அவற்றின் உரிமையாளர்கள் போல இவள் நலமின்றிக் கிடக்ககிறாள். என்று எடுத்துச் சொல்வாயாக. பரத்தை வீட்டிலிருக்கும் தலைவனிடமிருந்து தூது வந்த பாணனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள்.